கைது செய்யப்பட்ட திவ்யா
கைது செய்யப்பட்ட திவ்யா file image
தமிழ்நாடு

இதிலுமா மோசடி! ஆன்லைனில் ஆள்மாறாட்டம்.. ரூ1.98 லட்சம் சுருட்டிய கர்ப்பிணிப் பெண்-சிக்கியது எப்படி?

PT WEB

சென்னை மேற்குத் தாம்பரம் கன்னடபாளையம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(50). இவருடைய மனைவி சித்ரா(45). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வெங்கடேசனின் மகள் பிரசவ செலவிற்காக, மனைவி சித்ரா பெயரில் ஆன்லைனில் செயலி மூலமாக லோன் வாங்க ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். அன்றைய தினமே ஆன்லைன் நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறி திவ்யா என்ற கர்ப்பிணிப் பெண் வெங்கடேசனின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வெங்கடேசன் மனைவியின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட நகல் ஆவணங்களை வாங்கி சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து சித்ராவின் எண்ணிற்கு ஓ.டிபி வந்ததுள்ளது. ஆனால் வங்கிக் கணக்கிற்குப் பணம் வரவில்லை எனத் தெரிகிறது.

தலைமறைவான திவ்யாவின் கணவர் சரவணன்

இந்நிலையில் லோன் வழங்கியதாகக் கூறி ஆன்லைன் செயலி நிறுவனத்திலிருந்து 2 மாதம் கழித்து வெங்கடேசன் வீட்டிற்கு வந்த நபர் உங்கள் மனைவி சித்ரா பெயரில் லோன் ஆப் மூலமாக ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளதாகக் கூறி, அதற்கு இ.எம்.ஐ கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன்- சித்ரா தம்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரி பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் லோன் 'ஆஃப் பில் பணிபுரியும் திவ்யா என்கிற சித்ரா என்பவர் அவரது பெயரில் போலியாக சான்றிதழ்களைத் தயார் செய்து ஆள் மாறாட்டம் செய்து லோன் பெற்றுள்ளது தெரியவந்ததுள்ளது. பின்னர் திவ்யா என்கிற சித்ராவைக் கைது செய்து, அவரிடமிருந்து 50க்கும் மேற்பட்ட ஆதார்கார்டுகள், பான்கார்டுகள் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கு உடந்தையாகச் செயல்பட்டு வந்த திவ்யாவின் கணவர் சரவணன் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.