செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடையார் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம். இவரது மகன் ஆனந்த முரளி என்பவரது மகளுக்கு, நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், 4ஆம் தேதி காலை மணமேடைக்குச் செல்வதற்கு முன், மணமகள் தங்க வைர ஆபரணங்களை அணிவதற்காக, மண்டபத்தில் இருந்த அறைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த இரண்டு வைர நெக்லஸ்கள் வைரத் தோடுகள் தங்க நகைகளை காணவில்லை என்பதை அறிந்துள்ளார். அவற்றின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த முரளி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், டிப்டாப் உடை அணிந்து வந்த இரண்டு பேர் அறைக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இருசக்கர வாகன பதிவெண், செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் திருடியது, ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து ராம்ஜி நகருக்கு விரைந்த நீலாங்கரை தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த சுதர்சன் (31) என்பவரை கைது செய்தனர். மற்றொரு நபரான கார்த்திக் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பியோடிய நிலையில், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைதான சுதர்சன் எம்பிஏ பட்டதாரி என்பதும். இவர், பத்தாண்டுகளுக்கு மேலாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருவதும் பெரும்பாலும் போலீசில் சிக்கியது இல்லை என்பதும் தெரியவந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி, அங்குள்ள ரிசார்ட்கள், திருமண மண்டபங்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்துள்ளனர். கைதான சுதர்சனிடமிருந்து 10.5 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.