ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை PT
தமிழ்நாடு

சென்னை: சிகிச்சையில் கை அகற்றப்பட்ட விவகாரம்; தவறான சிகிச்சையில்லை என மருத்துவமனை விளக்கம்!

PT WEB

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இருந்த தீவிர ரத்த உறைதல் பிரச்னையாலேயே அவருக்கு கை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

வடசென்னை பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணுக்கு அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்துவந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இதயத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஜோதியை பரிசோதனை செய்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

கை அகற்றப்பட்ட இளம்பெண்

இதையடுத்து ஜோதியின் கணவர் ஜினத்தின் ஒப்புதலோடு கடந்த 15ஆம் தேதி ஜோதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டனர் மருத்துவர்கள். பின் இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை எனவும், அதேசமயம் ரத்த நாள பிரச்னை குறித்து பரிசோதனை செய்தனர். பின் ஜோதிக்கு கடந்த 19ஆம் தேதி கை மற்றும் கால்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள், அவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை தொடர்ந்து இருப்பதாகவும் உடனடியாக வலது கையை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியப் போக்கே மனைவியின் கை அகற்றப்பட காரணமாக இருப்பதாக அவரின் கணவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஜோதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் தொடர்பான செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் “இருதயவியல், ரத்த நாள அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 15ஆம் தேதி ஜோதிக்கு coronary angiography பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப்பின் கையில் வீக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கை மற்றும் கால்களில் Systemic arterial thrombosis என்ற இரத்த நாளங்கள் அடைப்பு நோயினால், பல நாளங்களில் அடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது வலது கை இரத்த உறைவினால் செயலிழந்து விட்டதால், முழங்கைக்கு மேல் வரை கை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நேற்று, “தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம்” என்று கூறியிருந்தார்.