தொடர்ந்து முதலிடத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! எதில், எப்படி சாத்தியமானது?

தொடர்ந்து முதலிடத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! எதில், எப்படி சாத்தியமானது?
தொடர்ந்து முதலிடத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! எதில், எப்படி சாத்தியமானது?

தமிழ்நாட்டில் தற்போது 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதை சில தர அளவுகோல்களை நிர்ணயித்து கணக்கீடு செய்கிறது தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம். அந்த அடிப்படையில் கடந்த 2022 ஏப்ரல் மாதத்திலிருந்து அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதலிடம் வகித்து வருகிறது.

1,500 க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்டு இயங்கும் தமிழ்நாட்டின் ஒரே அரசு மருத்துவமனை இதுதான் என்பதால் இம்மருத்துவமனை முதலிடம் பிடித்ததில் எனன் சிறப்பு என்ற கேள்வி எழலாம். தர வரிசை கணக்கீடு வெறும் சிகிச்சை பெற்றுவோரின் அதிக எண்ணிக்கையை பொறுத்தது மட்டுமல்ல. குறைந்த மருத்துவர்களை கொண்டிருக்கும் மருத்துவமனை கூட அரசு கொடுத்திருக்கும் மருத்துவக் கட்டமைப்பிற்கு ஏற்ப நோயாளிகளை பலன் பெறச் செய்திருந்தால் இந்த தர வரிசைப் பட்டியலில் கட்டாயம் முதன்மை பெற முடியும்.

மருத்துவமனையில் உள்ள துறைகளின் எண்ணிக்கை,  பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, படுக்கை வசதிகள், ஒருநாளைக்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை , உயிரிழப்பு  ஆகிய அனைத்து காரணிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டே இந்த தர மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து முதலிடத்தில் தங்கள் மருத்துவமனை இருப்பது குறித்து அவசர சிகிச்சை துறை பேராசிரியர் கோமதி கார்மேகம் நம்மிடையே பேசுகையில், “இம்மருத்துவமனையில், 24 மணி நேரமும் தேவையான அளவில் மருத்துவர்கள் இருந்துகொண்டே இருப்போம். இங்கு 24 மணி நேரமும் ஆய்வகங்கள், ரத்த வங்கியும் இயங்கும் நிலையில் உள்ளது. அனைத்து உயர்சிகிச்சை துறைகளும் இம்மருத்துவமனையில் உள்ளன" என்றார்.

அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவனையை பொறுத்தவரை அங்கு மொத்தம் 34 துறைகள் உள்ளன. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 பேர் முதல் சில நாட்களில் 16,000 பேர் வரை கூட புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 2,500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதயவியல் துறை உள்ளிட்ட முதன்மையான துறைகளில் மட்டுமே ஒருநாளைக்கு 66 அறுவை சிகிச்சைகளும், சாதாரண அறுவை சிகிச்சைகள் 37, அவசர அறுவை சிகிச்சைகள் 30 என ஒருநாளின் சராசரியாக 130 றுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 

புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சை எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை  மட்டுமே தினசரி 50 என்பது குறிப்பிடத்தக்கது. 113 பேருக்கு ஒருநாளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடமாக 24 மணி நேரமும் டயாலிசிஸ் யூனிட் இங்கு செயல்பட்டு வருகிறது.

அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் நம்மிடையே பேசுகையில், “கடந்த ஆண்டு தேசிய அளவிலான NIRF தரவரிசையில் 12 ஆம் இடம் பிடித்தோம். இந்த ஆண்டு NIRF-ல் 5-ம் இடம் கிடைக்கும் என நம்புகிறோம். தேசிய அளவில் முதலிடம் பிடிப்பதே எங்கள் இலக்கு" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com