Accused
Accused pt desk
தமிழ்நாடு

சென்னை: மதுபோதையில் வீடுபுகுந்து வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற நபரால் பரபரப்பு!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மதுரவாயல் அருகே போரூர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் கடந்த 11 ஆண்டுகளாக தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், இவரது எதிர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை கண்ட சத்தியசீலனின் நாய்கள் அந்த நபரை பார்த்து குறைத்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த இரும்பு ராடால் நாயின் வாயில் குத்திக் கொலை செய்துள்ளார்.

Dog

இதையடுத்து நாயின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தபோது, நாயை அந்த நபர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்த பொதுமக்கள், மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாயை கொன்ற நபரை பிடித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த நாயை வளர்த்துவந்தவர், அழுதபடி “நாய்க்கே இந்த நிலைமை என்றால் மக்களின் நிலை என்ன?” எனக் கேட்டபடி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.