செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண் 01-ல் முரசொலி மாறன் மேம்பாலம் அருகிலுள்ள புதர் பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த சத்தத்தைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர்களான காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் புதர் பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பையில் குழந்தை துணியால் சுற்றிக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து முற்புதரில் சிறிய காயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், பெரம்பூர் இருப்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தையை பரிசோதித்த போது, பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.