செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் வசித்து வருபவர்கள் திலீப் - சுவாதி. தும்பதியர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் நான்கரை வயதில் துருவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இன்று சுவாதியின் தந்தை மற்றும் தாயாரை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து ஆறாவது மாடியில் உள்ள இவர்களது வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது உள்ளே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துருவன், திடீரென ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக சிஎம்பிடி போலீசார், வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.