செய்தியாளர்: மணிகண்டபிரபு
கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்நாயகி என்ற பெண், தனக்கு சொந்தமான காரில் மதுரை டிவிஎஸ் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். வழியில் பரவை அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்புறத்தில் தீ பற்றியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரை உடனே நிறுத்தியுள்ளார். இதற்கிடையே தீ மளமளவென பரவத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்டு செந்தில்நாயகி காரை விட்டு கீழே இறங்கி உயிர்தப்பினார்.
இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் விரைந்துவந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் எரிந்த காரின் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
கார் முழுவதும் தீப்பற்றி எரிந்து நிலையில், அந்தப் பகுதி முழுவதும் புகை பரவியது. இதனால் மதுரை - திண்டுக்கல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.