இந்த கட்டுரை சென்னையின் வளர்ச்சி வேகத்தை மற்ற இந்திய பெருநகரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்கிறது. பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி போன்ற நகரங்கள் எதிர்கால தொழில்நுட்பங்கள், GCC மையங்கள், வெளிவட்டச்சாலைகள், இரண்டாம் விமான நிலையம் போன்ற கட்டமைப்பு வசதிகளில் முன்னேறியுள்ள நிலையில், சென்னை இன்னும் பின்தங்கியிருப்பதை புள்ளிவிவரங்கள் மூலம் விளக்குகிறது. வரவிருக்கும் பட்ஜெட்டில் சென்னைக்கான நீண்டநோக்கு திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறது.
இந்திய பெருநகரங்கள் பெரும் பாய்ச்சலுடன் எதிர்காலத்தை நோக்கிச்செல்லும் நிலையில் அவற்றோடு போட்டியிட சென்னை என்ன செய்யவேண்டும்? பாய்ச்சலுக்கான பாதை பட்ஜெட்டில் அமைக்கப்படுமா?பார்க்கலாம். நாட்டின் 4 பெரும் நகரங்களில் ஒன்றான சென்னை எதிர்காலத்திலும் இதே இடத்தை தக்கவைத்துக்கொள்ளுமா? அதற்கான நகர்வுகள் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
பல்வேறு புள்ளிவிவரங்களும் ஆய்வுத்தகவல்களும்தான் இந்த கேள்வி எழக் காரணம். 2035இல் உலகின் வேகமாக வளரும் நகரமாக பெங்களூரு இருக்கும் என்கிறது சாவில்ஸ் (SAVILLS) என்ற ரியல் எஸ்டேட் நிறுவன ஆய்வு. குவாண்டம் போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான நிறுவனங்களை ஈர்ப்பதில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் அமராவதியும் போட்டிபோடும் வேகம் பிரமிக்கவைக்கிறது.
GCC எனப்படும் பன்னாட்டு பணி மையங்கள் தொழிலில் பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி தலைநகர பிராந்தியத்திற்கு அடுத்துதான் சென்னை உள்ளது. புத்தாக்க தொழில்களை கவர்ந்திழுப்பதில் பெங்களூருவும் குருகிராமும் ஓடும் வேகத்திற்கு சென்னை இணையாக இல்லை. ஏஐ மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு பெங்களூருவே பெரும்பாலான நிறுவனங்களின் முதல் தேர்வு. பெங்களூருவும் ஹைதராபாத்தும் வெளிவட்டச்சாலைகள், 2ஆவது விமான நிலையம் என அடுத்தடுத்து முன்னேறி வருகின்றன.
உத்தர பிரதேசம் கூட அதிவேக எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை பெருக்கிவருகிறது. மாநகராட்சிகளின் வருடாந்திர பட்ஜெட் மதிப்பில் சென்னை 8ஆவது இடத்தில்தான் உள்ளது. இதில் புனே, சூரத், அகமதாபாத் போன்ற நகரங்கள்கூட சென்னைக்கு முன்னால் உள்ளன. சென்னையில் 2ஆவது விமான நிலையம் இல்லாதது பெரும் குறை. சென்னையை பின்னோக்கி இழுப்பதில் முன்னணியில் உள்ள அம்சம் இதுவே.
வானுயர் கட்டடங்களை கட்டுவதில் உள்ள விதிமுறை சிக்கல்களும் வேகமான வளர்ச்சிக்கு தடைக்கல். சென்னைக்கு 55 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி குறைந்த விலையில் நிலம், வரிச்சலுகைகள், விரைவான அனுமதி என தூண்டில் போட்டு சென்னை பகுதியில் வரவேண்டிய பல நிறுவனங்களை தன் பக்கம் தடம் மாற்றி வருகிறது. பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகளும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான அம்சங்களும் அவசரத்தேவையாக உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக்கான 3ஆவது மாஸ்டர் பிளான் வெளியிடுவதில் நீண்ட தாமதம் நிலவுகிறது. பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டு பகுதியில் நீண்ட தாமதம் நிலவுகிறது. பல முனைகளிலும் போட்டி WEBTEAM T, அதிகரித்துவரும் நிலையில் சென்னையின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட்டில் அரசு அறிவிக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.