அண்ணாமலை pt desk
தமிழ்நாடு

“பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது” - பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கின்றார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ராஜன்

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...

“இந்தியா பாகிஸ்தான் பிரச்னை இன்று நேற்று அல்ல, பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக் கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. தீவிரவாதம் செய்தவர்களுக்கு பாகிஸ்தானில் தீவிரவாத மையத்தை தாம் அடிக்கின்றோம். ஆனால் இந்தியாவில் மக்கள் மீது பாகிஸ்தான் போர் தொடுக்கிறார்கள்.

பதிலடியில் இறங்கிய இந்தியா

நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் ட்ரோன்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம். நாம் மிகப்பெரிய பொருளாதார நாடு, இந்தியாவின் பொருளாதாரம் நாம் 12 என்றால் பாகிஸ்தான் 1ல் தான் உள்ளது. பாகிஸ்தானுடன் சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போறதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகதான் இந்த போரை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும், பூமிக்கு கீழ் ஒளிந்திருந்தாலும் தேடிப்பிடித்து இல்லாமல் செய்து விடுவேன் என்று தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கின்றார். போர் இன்று, நாளை முடியாது, இதற்கு மேல் நாம் போகதான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும். பாகிஸ்தான், அதன் கண்ட்ரோலில் இல்லை. நாட்டிற்கு ஒரு ஆர்மி வேண்டும், ஆனால், பாகிஸ்தானிற்கு ஆர்மிக்கு ஒரு நாடு, அங்கு ஆர்மிதான் அரசை கண்ட்ரோல் செய்கிறது. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது, நாம் அவ்வளவு பலமாக இருக்கின்றோம்.

Operation Sindoor

நாம் நினைத்தால் ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால், அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம். சசிதருர் எம்பி இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானை எதிர்ப்பதில் திமுக உட்பட அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். திமுக பேரணி நடத்துகிறார்கள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இந்திய அரசிற்கு முழுமையாக தன்னுடைய ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.