இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்| சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது.
இந்த நிலையில் போர் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்திற்கு அவசரநிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
பாகிஸ்தான் பெயரில் வந்த மின்னஞ்சல் மூலமாக சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Pakistanjkweb@gmail.com என்ற முகவரியிலிருந்து மிரட்டல் வந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடந்தால் தாக்குதல் நடத்தப்படும் என "தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனுக்கு (TNCA)" மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மெயிலில் "we do bomb blast in stadium for operation sindoor, There will be blood bath" என குறிப்பிட்டு பாகிஸ்தான் பெயர் கொண்ட மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மிரட்டல் மெயிலை கைப்பற்றியுள்ளனர். மேலும், சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.