விஜயிடம் பல வழிகளிலும் பேச பாஜக முற்படுவதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து நாட்களில் எதுவும் நடக்கலாம் என்றும், அதிமுகவுக்குள்ளேயே பெரிய விவாதங்கள் உருவாகலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனிடையே விஜய் நடித்த ’ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது.
அதேநேரத்தில், திமுக போட்டியாகக் கருதப்படும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி கூறியுள்ள நிலையில், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெகவும் தெரிவித்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெற அதிமுக மற்றும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, பாஜகவும் தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலம், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டுவர பாஜக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பழனிசாமிக்கு, வேலுமணி வழியாக அழுத்தம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விஜயிடம் பல வழிகளிலும் பேச பாஜக முற்படுவதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து நாட்களில் எதுவும் நடக்கலாம் என்றும், அதிமுகவுக்குள்ளேயே பெரிய விவாதங்கள் உருவாகலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இடம்பெற்றால், அக்கட்சிக்கு 60 தொகுதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுகவுக்கு 140 இடங்களும், தவெகவுக்கு 60 இடங்களும் ஒதுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. மீதமுள்ள 34 தொகுதிகள் பாஜக, பாமக, அமமுகவுக்கு பிரித்து வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.
அதேநேரம் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றும், 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்ற நிலைப்பாட்டில் கே.பழனிசாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி கிடையாது என்றும், தவெகவுக்கு அதிகபட்சம் 40 தொகுதிகள் வழங்கலாம் என்பது கே.பழனிசாமியின் நிலைப்பாடு எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டபோது பலரும் கூட்டணி வைப்பதே சரியான முடிவு என்று தெரிவிக்கப்பட்டதாகவும், வேட்பாளர்கள் நேர்காணலிலும் இதையே வற்புறுத்தப்பட்டதாகவும் மேலும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு மட்டுமே விஜய் நேர்காணல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் விஜய் அதிமுகவுடனான கூட்டணிக்கு தயாராகி விட்டார் என்கிற தகவல்களும், கூட்டணி தொடர்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என தவெக தரப்பிலும் மாற்றிமாற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன.