நெருங்கும் தேர்தல்.. NDA கூட்டணியில் விஜயா? நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்!
என்.டி.ஏ கூட்டணியில் விஜயை இணைப்பதற்கு பாஜக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக, ஆந்திர துணைமுதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வழியாக விஜயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தனிமரமாக நிற்கும் விஜயை கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையில் இறங்கியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், விஜய் வருகிறாரா என்பதைத் தெரிந்துகொண்டு தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக இறங்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் விஜய் கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, என்.டி.ஏ கூட்டணியில் விஜயை இணைப்பதற்கு பாஜக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக, ஆந்திர துணைமுதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் வழியாக விஜயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், சிபிஐ, ’ஜனநாயகன்’ படத் தணிக்கைக் குழு வழியாக விஜயை பணியவைக்க மத்திய அரசு முயல்வதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மறு தணிக்கைக் குழு பார்வையிடுவதாக இருந்த ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை, அதிகாரி ஒருவரின் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தள்ளிப்போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரூர் துயர வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மீண்டும் ஆஜராகச் சொல்லி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவையெல்லாமே விஜயைக் கூட்டணிக்கு இழுப்பதற்கான திட்டமாகவேப் பார்க்கப்படுகிறதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழலில் விஜய் என்.டி.ஏ கூட்டணியில் இணையவிருப்பதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் அமீர், “CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போய்விடாதீர்கள், அத்துடன் உங்கள் அரசியல் முடிந்துவிடும்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக வெளியான தகவல், வதந்தி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ”விஜயின் 'ஜனநாயகன்' படத் ணிக்கை சிக்கலுக்கும், அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதற்கும் பாஜகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ”தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், அனைத்துத் தொகுதிகளிலும் தங்கள் அணியே வெற்றி பெறும்” என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். ”அதேவேளையில், தவெக கூட்டணிக்கு வருவது உண்மையா என தெரியவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

