bike theft
bike theft file image
தமிழ்நாடு

வேலூர்: நாய்க்கு முட்டையை போட்டு பைக்கை அபேஸ் செய்த திருடர்கள்.. போலீஸார் வலை

யுவபுருஷ்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு இளங்கோதெருவை சேர்ந்தவர் விக்னேஷ் குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ந்துள்ளார்.

இதனையடுத்து காட்பாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் விக்னேஷ் குமார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாருக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. காரணம், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், விக்னேஷின் பைக்கை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

அத்தோடு, அங்கிருந்த நாய் குறைக்காமல் இருக்க முட்டைகளை போட்டதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. வின்னர் படத்தில் வரும் வடிவேலு காமெடி பாணியில் அரங்கேறியுள்ள இந்த திருட்டு அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சிசிடிவி காட்சி பதிவுகளை அடிப்படையக வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.