செய்தியாளர்: சுப்ரமணியம்
அன்னூரில் நடைபெற்ற அவினாசி அத்திக்கடவு திட்டக் குழு சார்பில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது.
இந்நிலையில் கோபி அருகே குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”அத்துக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்த குழுவினர் மூன்று நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அப்போது அவர்களிடம், விழா மேடை, விளம்பர பலகையில் எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. எங்களிடத்தில் கலந்து இருந்தால் நான் அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பேன். என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவருடைய உருவப்படங்கள் இல்லை.
அதே நேரத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு கடந்த 2011ல் ஜெயலலிதா 3.72 கோடி ரூபாய் நிதி வழங்கினார். அப்போது பொதுபணித் துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம், அதை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கினார். இந்த பணிகளை துவங்கிய நேரத்தில் அவர்கள் அடித்தளமாக இருந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களது படங்களும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன்” என்றார்.