தென்னரசு
தென்னரசு புதியதலைமுறை
தமிழ்நாடு

அறந்தாங்கி | 2003-ல் எஸ்கேப் ஆன குற்றவாளி.. 20 ஆண்டுகள் கழித்து மடக்கிப்பிடித்த போலீஸ்..!

யுவபுருஷ்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு(41) என்பவர், கடந்து 2003 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி அறந்தாங்கி பகுதியில் விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார், அவரை அப்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வாகனத்தில் கூட்டி சென்றுள்ளனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தென்னரசு தப்பி ஓடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 20 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தென்னரசு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் அந்த வழக்கு மட்டும் நிலுவையிலேயே இருந்துள்ளது. 20 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த தென்னரசுவை அறந்தாங்கி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இன்று அவரது சொந்த ஊரில் வைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 20 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்குக்காட்டி வந்த சாராய விற்பனை செய்த குற்றவாளியை, அறந்தாங்கி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.