பட்டாசு ஆலை வெடி விபத்து pt desk
தமிழ்நாடு

சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் பலி

சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே கீழதாயில்பட்டியில், திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன இந்த நிலையில் இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர், கமலேஷ் ராம், ராகேஷ் வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையின் போர்மேன் யோகநாதன் கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து என மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ ராஜேந்திரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.