அன்புமணி ராமதாஸ் Pt web
தமிழ்நாடு

”மத்திய அரசிடம் எதிர்ப்பு போக்கு இருந்தால் எதுவும் கிடைக்காது” - அன்புமணி ராமதாஸ்

திமுக மத்திய அரசை எதிர்த்து, எதிரி போன்ற போக்கை கடைபிடித்ததின் காரணத்தினால் தமிழ்நாட்டில் நிறைய திட்டங்கள் வரவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மாலை மதுரையில் நடைபெறவிருக்கிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியுடன் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பொதுக்கூட்ட மேடையில் இடம்பெறுகிறார்கள். புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று மாலை மதுரை வரவிருக்கிறார். இந்த சூழலில் தான், என்.டி.ஏ கூட்டணி கட்சித் தலைவர் மதுரை வரத் தொடங்கியுள்ளனர்.

மோடி

அதன்படி இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, ”பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் தமிழ்நாட்டிற்கு நிறைய வளர்ச்சி வரும், அதுதான் எங்களுடைய எண்ணம்.

மத்திய அரசு எதிர்ப்பு போக்கு இருந்தால் எதுவும் கிடைக்காது.. பிரச்சனை தான் வரும். திமுக அரசு மத்திய அரசை எதிர்த்து எதிரி போன்ற போக்கை கடைபிடித்ததின் காரணத்தினால் தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வரவில்லை. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் இணக்கமான சூழ்நிலை காரணமாக பல திட்டங்களும் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டிற்கு வரும் இதை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு பணியில் போலீசார்

முன்னதாக, மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கவிருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புடன் காவல் துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநாட்டுப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.