சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிகிதா, தனது தங்க நகை காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உள்பட சிலரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில் அஜித்குமார் கடுமையான சித்திரவதைக்கு ஆளானதற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தநிலையில் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று (8.7.2025) நடைபெற்றது.
அப்போது பேசிய அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ” நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசு வேலை இல்லை. மேலும், ஆவின் அலுவலகம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, மதுரையிலேயே அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும். வளர்ச்சியடையாத பகுதியில் எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் எங்களுக்கு திருப்தி இல்லை. அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். ” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அஜித்குமார் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது “ நவீன்குமாருக்கு வழங்கப்பட்ட ஆவின் பணி, அரசுப் பணியல்ல” என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “ஆவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்தான்” என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.