சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த பின் சபாநாயகர் அப்பாவு அவையை விட்டு வெளியேறினார். இதனையடுத்து துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்றால் 35 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என சொல்லப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஆதரவு தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததையடுத்து பாஜக எம்.எல்.ஏக்கள் நால்வரும் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இத்தகைய சூழலில் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அவைத்தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசும்போது சபாநாயகர் அடிக்கடி குறுக்கீடு செய்கிறார். அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. அதிமுக வெளிநடப்பு செய்தால் சபாநாயகர் கிண்டல் செய்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2017 ஆம் ஆண்டு என்னால் இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டதை எண்ணி நான் வருந்தினேன் என்பதை நான் என் உரையில் பதிவு செய்துள்ளேன். ஆனால், இத்தீர்மானம் இன்றைக்கு கொண்டுவரப்பட்டதன் மூலம், கடந்த பேரவையில் செயல்பாடுகள், அன்றைய பேரவைத் தலைவர் ஜனநாயகத்தை மதியாது நடந்துகொண்ட முறைகளைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட நன்றாகத் தெரியும்.
பேரவைத் தலைவர் ஜனநாயகக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்களது மணம் வருந்தாத அளவில் தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையாக கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவர். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அப்பாவு. கனிவானவர் அதேநேரத்தில் கண்டிப்பானவர்” எனத் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அதிமுக கோரியிருந்தது. டிவிஷன் முறையிலான வாக்கெடுப்பு என்பது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பாகும்.
இதில், அதிமுக கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை எனும் நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 154 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 63 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், குழு, டிவிஷன் என இரு முறையிலான வாக்கெடுப்பிலும் அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து சபாநாயகர் இருக்கையில் மீண்டும் அப்பாவு அமர்ந்தார்.