எடப்பாடி பழனிசாமி - எஸ்பி வேலுமணி sp velumani - eps
தமிழ்நாடு

’திருமாவை முதல்வராக்க பழனிசாமியிடம் ஆதரவு கேட்டதே வேலுமணி தான்..’ - பகீர் குற்றச்சாட்டு!

தவெகவுக்கு ஆதரவளித்த எங்கள் மீது நடவடிக்கை என்றால் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பினார்.

PT WEB

கோவை ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, தவெக ஆதரவு அளித்த எங்கள்மீது நடவடிக்கை எடுக்கும்போது, திமுகவுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டது வேலுமணி, சி.வி. சண்முகம் தான் என பகீர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்த தவறானமுடிவுகளாலே 2021, 2024, 2026தேர்தல்களில் வெற்றி வாய்ப்புபறிபோனதாக குற்றம் சாட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் இருவரும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

2026இல் தவெகவுடன்கூட்டணி அமைக்கும் வாய்ப்பை பழனிசாமி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், தேர்தலுக்குப்பின் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது தவறான முடிவு என்றும் இருவரும் சாடியுள்ளனர். ஆறுமாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் அதிமுகவிலிருந்து பிறகட்சிகளில் சேர்ந்தவர்களுடன் பேசி மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். சட்டமன்றத்தேர்தலுக்குப் பிறகு நீக்கப்பட்ட 400க்கும்மேற்பட்ட அதிமுக செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எஸ்பி வேலுமணி

மேலும் தவெகவுக்கு ஆதரவளித்த எங்கள் மீது நடவடிக்கை என்றால் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பினார். கோவைப்புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகன் தவறான வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

இந்தசூழலில் எஸ்.பி. வேலுமணி வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டதே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சி.வி. சண்முகமும்தான் என்றும், திமுகவிடம் தாங்கள் பேசிவிட்டதாக வேலுமணியும் சண்முகமும் பழனிசாமியிடம் கூறினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.