தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்றைய முன் தினம் (மே-4) நடந்து முடிந்திருக்கிறது. இதில், ஆளுங்கட்சியாக இருந்த திமுகவையும், எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவையும் தோற்கடித்து தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது தவெக. அதன்படி, தவெக அதிகப்படியாக 108 இடங்களில் வெற்றியடைந்திருக்கும் நிலையில், திமுக 59 இடங்களிலும், அதிமுக கூட்டணி 47 இடங்களிலும் நேரிடையாக வெற்றி பெற்றிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிட்ட காரைக்குடி உட்பட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்திருக்கிறது.
இதற்கிடையில் தான், தமிழ்நாட்டை 7 முறை ஆட்சி செய்த அதிமுக 101 இடங்களில் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்காக கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், 169 இடங்களில் நேரிடையாக களம் கண்டது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக்கட்சிகள் களம் கண்டன. இந்தநிலையில் தான், வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு அதிர்ச்சியளித்திருந்தது. அதேசமயம், மீதமுள்ள 122 இடங்களில் பெரும்பாலான இடங்களில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 122 இடங்களில் 21 இடங்களை தவிர்த்து அதாவது 101 இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது என தெரியவந்திருக்கிறது. இதில், முன்னாள் அமைச்சர்களான ராயபுத்தில் போட்டியிட்ட ஜெயக்குமார், ஆயிரம் விளக்கில் வளர்மதி, மாதாவரத்தில் மூர்த்தி உள்ளிட்ட பலரும் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, ஒரு தொகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கையில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெறமுடியாமல் போகும்போது வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின் போது தாங்கள் செலுத்திய வைப்புத் தொகையை பெறமுடியாமல் போகும் இதுவே, டெபாசிட் இழப்பு எனப்படுகிறது.