தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், அக்கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தவெக முயன்றது. அப்போது அமமுக சார்பில் வென்ற காமராஜிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதேபோல சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதனால் அதிமுகவிலும் குதிரை பேரம் நடந்திருப்பதாக பழனிசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இந்தசூழலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்பி வேலுமணி தரப்பு என இரண்டாக பிளவுபட்டுள்ளது வெளிச்சமானது. இதைத்தொடர்ந்து வேலுமணி தரப்பு 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்து இருப்பதாக தகவல் வெளியானது. இவ்வாறு, அதிமுகவில் மீண்டும் ஒரு உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் தான், அதிமுக அவசர பொதுக்குழுவை கூட்டுவதற்கு வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ- க்களான காமராஜ், விஜயபாஸ்கர், எம். ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, அதிமுக பொதுக் குழுவை கூட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மொத்தமுள்ள 1,800 பொதுக்குழு உறுப்பினர்களில், பொதுக் குழுவை கூட்ட சுமார் 1,050 பேர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மனுவை, எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி, கூட்டத்தை கூட்ட அழுத்தம் கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என எடப்பாடி கே.பழனிசாமி தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுக்குழுவில் கே.பழனிசாமியின் அதிமுக தலைமை பதவிக்கு அழுத்தம் கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.