சீமான் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

காவலருடன் தள்ளுமுள்ளு.. பணியாளர் கைது - சீமான் வீட்டில் நடந்தது என்ன? வழக்கறிஞர்கள் சொல்வதென்ன?

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணைக்காக சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகத நிலையில், 4 வாரகாலம் அவகாசம் கேட்டு, வழக்கறிஞர் குழு கடிதம் கொடுத்து விளக்கம் அளித்துள்ளனர்.

PT WEB

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீசார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

விஜயலட்சுமி, சீமான்

வழக்கில் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், “பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், போலீசார் 12 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி, இன்று காலை வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

ஆனால், சீமான் விசாரணைக்காக ஆஜராகவில்லை. நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞரணியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர் குழு கடிதம் ஒன்றை வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்து சீமான் ஆஜராகாததற்கு விளக்கம் அளித்தனர்.

இதன் பிறகு வெளியே வந்த வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வளசரவாக்கம் போலீசார் பேட்டி கொடுக்கவிடாமல் தடுத்தனர். இதனால் வழக்கறிஞர் குழுவினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து வழக்கறிஞர் சங்கர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சம்மன் அனுப்பி இருந்தார். அதன்படி சீமான் இன்று ஆஜராக வில்லை. புகார்தாரரான நடிகை ஏற்கனவே அவர் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக கூறி 2 முறை எழுத்துப்பூர்வமாக இதே காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் சம்மன் கொடுக்கப்பட்டது. அப்போது சீமானிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். எழுத்துப்பூர்வமாக விளக்கத்தை சீமான் அளித்தார். தற்போது மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள சம்மன் அரசியல் அழுத்தம் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

சீமான் - விஜயலட்சுமி

உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சம்மன் வருவதற்கு முன்பாகவே கட்சி தொடர்பான வெளிமாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக ஒப்புக் கொண்டிருந்தார். அதனால்தான் அங்கு சென்றுள்ளார். இந்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கும் படி எழுத்துப்பூர்வமாக கடிதம் காவல்துறையிடம் கொடுத்துள்ளோம்” என்றார்.

மேலும், “மற்றொரு தேதியில் சம்மன் கொடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் என்றுதான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவை திரித்து செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. சீமான் குற்றவாளிபோல சித்தரித்து வெளியிட்டுள்ளது. அதன் பின்னணியில் திமுக இருக்கிறது” என்று வழக்கறிஞர் சங்கர் தெரிவித்துள்ளார். சீமான் தரப்பில் வழங்கப்பட்டுள்ள கடிதம் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.