நடிகர் விஷால் pt desk
தமிழ்நாடு

“மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க...” - நடிகர் விஷால் சொன்னது என்ன?

“நானும் மதுரைக்காரன் தாண்டா” - மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க என மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் விஷால் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற உள்ளது. அதில், பங்கேற்பதற்காக மதுரை வருகை தந்த நடிகர் விஷால், மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்....

“செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? அப்படி செஞ்சா, எங்க அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க... அதை அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006இல் திமிரு பட சூட்டிங் நடந்த போது இங்கு வந்தேன். 19 வருஷம் கழித்து இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டேன்

நடிகர் சங்க கட்டடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்க தேர்தலை வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டடம் பெருசாக வந்துவிடும். என்னை விட்டு விட மாட்டார்கள் இயக்குனர்கள். நான் மதுரைக்காரன், ஆமாம் 'நானும் மதுரைக்காரன் தாண்டா.

மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம் மற்றொன்று உணவு. நூறு வருஷம் கழித்து வந்தாலும் அதே பாசமும் சிரிப்பும் இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா, பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம், நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை” என்றார்.