செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அருகே அயப்பாக்கத்தில் வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் துரை வீரமணி தலைமையில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியம், முபெ.சாமிநாதன் நடிகர் எஸ்வி.சேகர் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் எஸ்வி.சேகர் பேசுகையில்...
அடித்தால் வலிக்காத சாட்டை கோவையில் கிடைக்கிறது:
உலகத்திலேயே அடித்தால் வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில் தான் கிடைப்பதாக தெரிவித்தார்கள். அத்தனை அடி அடித்தும் ஒரு காயம் கூட இல்லை. செருப்பு போட மாட்டேன் என்றார். ஆனால், ஷூ போட்டு செல்கிறார். வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார் அண்ணாமலை. தேசவிரோதி என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. இந்தியாவில் பிறந்தால் இந்தியன் தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன் அவ்வளவுதான்
காவல்துறை பணியை தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் அல்ல முதல்வர்:
தேசவிரோதி என்று குறிப்பிடுபவரை லூசு என்றுதான் சொல்ல வேண்டும். தேசத்திற்குள் தமிழ்நாடு இல்லையா. இதில், என்ன தேச விரோதம். தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தாலே அது தேசத்திற்கு விசுவாசமாக இருப்பது போல் தான். நான் எந்த கட்சியும் இல்லாமல் ஒரு நடிகனாக இந்த அரசின் திட்டங்களை வரவேற்கின்ற முதலமைச்சரின் நண்பனாக இருக்கின்றேன். முதலமைச்சர் ஒன்றும், ஆறு வருடம் காவல் துறையில் இருந்துவிட்டு அந்த வேலை விட்டு தூக்கி விடுவார்கள் என்று அரசியலுக்கு வந்தவர் அல்ல.
அண்ணாமலை தான் நகைச்சுவை சக்கரவர்த்தி:
இனிமேல் என்னை யாரும் நகைச்சுவை சக்கரவர்த்தி எனக் கூற வேண்டாம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நகைச்சுவை சக்கரவர்த்தி என கூறலாம். நடிகர் விஜய்க்கு சினிமா முதலமைச்சர் வேறு நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை. பாண்டிச்சேரியில் உள்ள ஒருவரை ஆலோசகராக வைத்துள்ளார் இங்கு கவுன்சிலருக்கு கூட 36 தெருக்கள் உள்ளது என்று எஸ்வி.சேகர் பேசினார்.