கமல் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்குவதாகவும், அவ்விரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அது தமிழ்நாட்டையும் பரபரப்பாக்கி உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. தவெகவுக்குள் எந்தக் கட்சிகளும் செல்லாத நிலையில் அது தனித்து விடப்பட்டுள்ளது. சீமான் கட்சியோ தனித்தே தேர்தலைச் சந்தித்துவருகிறாது. இந்த நிலையில், பிற கட்சிகள் அனைத்தும் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அதிமுக, திமுக ஆகிய பெரிய கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், '2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டுகட்டமாக நடைபெற்றது. இன்றிருக்கும் இக்கட்டான சூழலில் நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. ஆகவே, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை. அதேநேரத்தில் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், “தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எங்கே எங்கள் பங்கு என கேட்பது நல்ல சகோதரனின் அடையாளம் அல்ல. தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கமல் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்குவதாகவும், அவ்விரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறப்படுகிறது.