ஆயி பூரணம் அம்மாள்
ஆயி பூரணம் அம்மாள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

'படிப்பை விட்றாதீங்கப்பா...' - மேலும் 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி பூரணம் அம்மாள்!

PT WEB

மதுரை கே புதூர் அருகே வாழும் ஆயி பூரணத்தம்மாள், கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கினார். பள்ளிக்கு கட்டடம் கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்ட் நிலத்தின் இன்றைய மதிப்பு 7 கோடி ரூபாயாகும். மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக, அந்த இடத்தை உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆயி பூரணம் அம்மாளுக்கு எம்.பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்த நிகழ்வு

அவரின் இந்த செயலுக்காக பூரணத்தம்மாளுக்கு தமிழக அரசு குடியரசு தினத்தில் விருது அளித்து கவுரவித்தது.

இந்நிலையில், அதே பள்ளியில் கட்டுமானம் கட்டுவதற்காக கூடுதலாக 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார் பூரணத்தம்மாள்.

கட்டடம் கட்டும்போது அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பூரணத்தம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு தான பத்திரப் பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் பூரணம் அம்மாள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

மகளின் நினைவாக 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பள்ளிக்கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.