TNUSRB web
தமிழ்நாடு

"உயிரை பறிக்க முயற்சி".. பெண் ஐபிஎஸ் அதிகாரி அதிர்ச்சி புகார் - டிஜிபி அலுவலகம் விளக்கம்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தனது உயிரைப் பறிக்க சதி செய்யப்படுவதாக தமிழகப் பெண் ஏடிஜிபி ரேங்க் IPS பெண் அதிகாரி பரப்பரப்பு புகாரளித்துள்ளார்.

PT WEB

கடந்த ஆண்டு TNUSRB அலுவலகத்தில் நடந்த தீ விபத்தானது தன்னை கொலை செய்ய நடத்தப்பட்ட சதி என்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் புகாரையடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது சென்னை காவக்துறை.

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும் தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக பணிபுரிந்து வரும் கல்பனா நாயக் IPS., தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடந்திருக்குமோ? என்ற அடிப்படையில் புகார் அளித்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ..

கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி திடீரென எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் குறிப்பாக ஏடிஜிபி அறையில் தீ விபத்து நடந்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்டமாக ஏ.சி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த நிலையில் அறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் IPS இல்லை.

tnusrb

இந்த நிலையில் தான் தீ விபத்து நடந்த 15 நாட்களுக்குப் பிறகு விடுப்பில் சென்றிருந்த ஏடிஜிபி கல்பனா நாயர் தமிழக டிஜிபி உள்துறைச் செயலர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து என்பது தன்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட நாடகம் அல்லது சதி என பரபரப்பு குற்றச்சாட்டை புகாரில் தெரிவித்துள்ளார்.

முறன்பாடுகளை சுட்டிக்காட்டியதால் கொலை செய்ய சதி..

குறிப்பாக, அந்த புகாரில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் முடிவுகள் வெளியான விவகாரத்தில், குறிப்பாக இட ஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது தொடர்பாக சுட்டி காட்டப்பட்டதாகவும், இதன் காரணமாக தன்னுடைய உயிருக்கு ஆபத்தாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்க சொத்துக்களும் சேதமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார் .

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்தபோது உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் நடந்த முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

tnusrb

அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக சப்-கமிட்டி அமைக்கப்பட்டு முரண்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயர் நீதிமன்றம் தொடர்புடைய அதிகாரிகள் தேர்வு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்து வெளியிடுமாறு தெரிவித்தது.

 இந்த நிலையில் தான் ஜூலை 29ஆம் தேதி சென்னை எழும்பூர் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மூலமாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார், அதில் தன்னுடைய அறையில் தீ விபத்து நடந்திருப்பதாகவும், இதனால் அலுவலகம் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் சிறிது நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் என்னுடைய உயிரை இழந்து இருக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களாக விசாரணை நடத்தப்படவில்லை..

இந்தத் தீ விபத்து என்பது தான் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுகளில் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியதன் காரணமாக தொடர்ச்சியாக நடந்ததாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முந்தைய ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளையும் தெரிவித்ததால் தனது உயிருக்கு ஆபத்தாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தீ விபத்து நிகழ்ந்த தினத்தின்போது இறுதிப் பட்டியலை ஆய்வு செய்து குறைகளை நீக்கி திருத்தப்பட்ட பட்டியல் தயார் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த தீ விபத்து நிகழ்ந்து 15 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்பனா நாயக் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி, விடுப்பை முடித்துவிட்டு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் உத்துறையைச் செயலாளர் சென்னை காவல் துறை ஆணையருக்கும் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கல்பனா நாயர் தெரிவித்துள்ளார் குறிப்பாக இந்த தீ விபத்து ஏதோ நாடகம் நடந்திருப்பதாகவும் சதி வேலை நடந்து இருப்பதாகவும் சந்தேகததை புகாரில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஏடிஜிபி கல்பனா நாயக் IPS., தீ விபத்து நடந்த பிறகு திருத்தப்பட்ட பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தீ விபத்து தொடர்பாக உடனடியாக விசாரணையும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்

தனது சொந்த தலைமை அலுவலகத்திலேயே ஒரு மூத்த உயர் அதிகாரியின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், பல அதிகாரிகள் சுற்றி இருந்தும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார்

ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை முறையான விசாரணை புகார் தொடர்பாக நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ADGP கல்பனா நாயக் IPS.,ஐ கொலை செய்ய சதி நடந்ததா? என்பது குறித்து சென்னை காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதற்கட்டமாக  ஏ.சி மின் கசிவு காரணமாக விபத்து நடந்ததாக தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெண் உயர் அதிகாரி புகார் அளித்துள்ளதால் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த இட ஒதுக்கீடு தொடர்பான முரண்பாட்டை வெளிப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சதி நடந்துள்ளது என்ற சந்தேகம் எழுப்பும் வகையில் பெண் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

ஒரு காவல்துறை அதிகாரிக்கே முறைகேட்டை வெளிப்படுத்தியதற்காக கொலை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, இதற்கு முக ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.

தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது, இந்த செயலுக்கு திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?

ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, திரு. முக ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி குற்றச்சாட்டுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு

இந்நிலையில், ஏடிஜிபி குற்றச்சாட்டுக்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே தீ விபத்து ஏற்படுத்திய செயல் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.