ஓவியர் மாசேத்
ஓவியர் மாசேத்  FILE IMAGE
தமிழ்நாடு

தர்மபுரி: 10 நிமிடத்தில் தத்ரூப ஓவியம்; நூதன முறையில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த துணிக்கடை!

PT WEB

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ஏராளமான ஜவுளிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கடை உரிமையாளர்கள் பல்வேறு தள்ளுபடி மற்றும் இலவச பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய புகைப்படத்துடன்...

இந்தநிலையில் சற்று வித்தியாசமான முறையில் பிரபல துணிக்கடை ஒன்றில், சென்னை போன்ற பெருநகரங்களைப் போலவே துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகளுக்குக் கையில் மருதாணி போட்டு விடுகின்றனர். அழகிய ஓவியங்களைப் பரிசாக வழங்கி வருகின்றனர். மேலும் மாசேத் என்ற ஓவியர் ஜவுளிக் கடையில் துணி எடுக்க வரும் வாடிக்கையாளர்களை அவர்கள் கண் முன்னே 10 நிமிடத்தில் ஓவியமாக வரைந்து தன் கையொப்பமிட்டு இலவசமாக வழங்கி வருகிறார்.

இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். கடை உரிமையாளர்கள் ஓவியருக்கு ஊதியத்தையும் வழங்கி விடுகின்றனர்.

இந்த தீபாவளி பண்டிகையால் கடந்த பத்து தினங்களாக ஓவியருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓவியர் மாசேத் இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்களுக்குத் தான் வரைந்த ஓவியங்களை நேரில் வழங்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.