சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக ஒருங்கிணைப்பில் சென்னையில் 20ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும்.
அண்டை மாநிலமான தெலுங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கிட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயிர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. ஆனால், இதை எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணியும், பாமகவினரும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டி மிகத்தீவிரமாக செயல்படுகின்றனர். அதேவேளையில், 10.5% உள் ஒதுக்கீடு வேண்டித்தான் அன்புமணி அனைத்து சமூகத்தினரையும் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக உள்கொண்டு வருகிறார் என்ற விமர்சனங்களும் எழுகின்றன.
இதுதொடர்பாக பேசுவதற்காக அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச் செயலரான ஜி.கருணாநிதியைத் தொடர்பு கொண்டோம்.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமைதானே. மாநில அரசு சர்வேதானே எடுக்கிறது.
மற்ற மாநிலங்கள் என்றால் தெலங்கானாவையும் பிகாரையும் உதாரணத்திற்குச் சொல்லுவார்கள். தெலங்கானாவில் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 27%தான் இருந்தது. இதனையடுத்து, கணக்கெடுப்பை நடத்தி தற்போது 42% என வந்துள்ளார்கள். நாம் 1980களிலேயே 50% இடஒதுக்கீட்டுக்கு வந்துவிட்டோம். தெலங்கானாவிற்கும் நமக்கும் ஒப்பீடே கூடாதே! நாம் இடஒதுக்கீடு வழங்கி கிட்டத்தட்ட 45 வருடங்களுக்குப் பின்தான் தெலங்கானாவில் அதுகுறித்தான யோசனையே வந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமா வேண்டாமா என்பதற்கான உரையாடல் வேறு. ஆனால், தெலங்கானாவையும், தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது தவறு.
மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்துகிறது என்றால் யாரும் அதில் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், தெலங்கானாவில் எடுத்த கணக்கெடுப்பைக் கேள்வி கேட்கிறார்கள். அங்கு கணக்கெடுப்பைத் தவறாக எடுத்துவிட்டார்கள் என்றும் வேண்டுமென்றே குறைத்து சொல்கிறார்கள் என்றும் அம்மாநில பாஜகவே குற்றம்சாட்டுகிறது. மத்திய செய்ய வேண்டிய வேலையை மாநில அரசு செய்துள்ளது. அதையும்தாண்டி சர்வே என்றால் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில், சர்வே என்பது சாம்பிள்தான். அது முழுமையானதாக எப்படி இருக்க முடியும்.
தமிழ்நாட்டிலும் அதுபோல் நடக்க சாத்தியமிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கேட்பவர்கள், கணக்கெடுப்பு எடுத்தப்பின், தாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரவில்லை என்றால் ‘வேண்டுமென்றே தங்களது மக்கள்தொகையை குறைத்துவிட்டார்கள்’ என்று சொல்வார்கள். இந்த சிக்கலில் ஒரு மாநில அரசு சென்று மாட்டுமா? அதைத் தள்ளிப்போடத்தானே செய்வார்கள்.
கணக்கெடுப்பை நடத்த வேண்டிய மத்திய அரசு பேசாமல் இருக்கிறது. அவர்களை நோக்கி யாரும் கைகாட்டமாட்டேன் என்கிறார்கள். மற்றவர்கள் கேட்கவில்லை, அதை விடுங்கள். அன்புமணி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தானே இருக்கிறார். அதைவிடுத்துவிட்டு தமிழக அரசிடம் கேட்பதைப் பார்க்கும்போது ‘உங்களது அஜெண்டாவே வேறாக இருக்கிறது’ என்றுதானே புரிந்துகொள்ளப்படும்.” என்கிறார் ஜி.கருணாநிதி.
இந்த விவகாரம் தொடர்பாக CHAT WITH KARTHI சிறப்பு நேர்காணலில் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கலந்துகொண்டார், அவரிடம் நெறியாளர் கார்த்திகேயன் நடத்திய கலந்துரையாடலில் சிறுபகுதி..
9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் அரசியல்சாசன அமைப்பின் பாதுகாப்பைப் பெறுகிறது; நீதிமன்றங்கள் அதில் கேள்வி எழுப்ப முடியாது எனும் நிலை இருந்தது. அதன்பிறகு நில சீர்திருத்தம் தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப நில சீர்த்திருத்த சட்டங்களை மாற்றி 9 ஆவது அட்டவணையில் சேர்த்தனர். அந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைக்கு எதிராக இருந்தால் அதை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்’ எனும் தீர்ப்பினை வழங்கிவிட்டது. இப்போது, 9ஆவது அட்டவணையில் இருக்கும் விஷயங்கள், அதற்காகத் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துவருகிறது.
மற்ற எல்லா மாநிலங்களையும் விட, நடத்தியாக வேண்டிய கட்டாயத்திலும், அதற்கான தார்மீகப்பொறுப்பிலும் இருப்பது தமிழ்நாடுதான். உச்சநீதிமன்றம் ‘நடத்திக்காட்டுகள்’ என நமக்குத்தான் சொன்னார்கள். 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட ஒன்றை பாதுகாக்க வேண்டிய இடத்தில்நாம் இருக்கிறோம்.
வழக்கறிஞர் பாலுவின் முழுமையான நேர்காணல் கீழ் உள்ளது.