Arrest
Arrest file
தமிழ்நாடு

திருநெல்வேலி: ஒரே நாளில் இரண்டு கொலை - மூன்றாவது கொலை செய்ய முயன்று போலீஸில் சிக்கிய கும்பல்!

webteam

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ். இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல சுரேஷ் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Murder

இதனிடைய நேற்றைய தினத்திலேயே தூத்துக்குடி பகுதியில் கருப்பசாமி என்பவரை கொலை செய்ய முயன்ற போது பாளையங்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் காவல் துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்களை விசாரித்த போது தாங்கள் ஏற்கனவே இரண்டு கொலைகளை செய்துவிட்டு மூன்றாவதாக கருப்பசாமியை கொலை செய்ய வந்ததாகவும், அப்போது காவல்துறையிடம் பிடிபட்டதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்த போது, கார்த்திக்கின் புல்லட்டை எடுத்துச் சென்ற பாபு செல்வம் என்பவர் அதனை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக பெருமாள்புரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாளையங்கோட்டையை சேர்ந்த பாபு செல்வம் என்பவரை நேற்று (10.02.24) காலை ரெட்டியார்பட்டி, மலை இருக்கும் காட்டுப்பகுதியில் கொலை செய்துவிட்டு, செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேஷையும் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Arrested

காவல்துறையிடம் பிடிபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவருக்கு ஐயப்பன் என்ற சுரேஷூடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை செய்துங்கநல்லூர் பகுதியில் வைத்து கொலை செய்துள்ளார் அந்நபர். தொடர்ந்து தூத்துக்குடி பகுதிக்கு சென்று கருப்பசாமி என்பவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இந்த தகவல் அவருக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதையடுத்து தன்னை கொலை செய்ய திருநெல்வேலி இருந்து ஆறு பேர் கொண்ட கும்பல் வருவதாக கருப்பசாமி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு, இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

இதையடுத்து அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உட்பட மொத்தம் ஆறு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையிர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.