நரேந்திர மோடி Pt web
தமிழ்நாடு

திருச்சி | வேட்டி சட்டையில் பிரதமர் மோடி.. ரூ. 5,655 கோடி திட்டங்கள் துவக்கம்!

திருச்சியில் இன்று மாலை 6.30 மணியளவில் என்.டி.ஏ. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர் ரூ. 5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியான பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களும் அக்கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி

அந்த வகையில் தான், செங்கல்பட்டு மற்றும் மதுரை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட என். டி. ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்து, இந்தக் கூட்டத்திற்கு 7 லட்சம் பேர் வரை வரவுள்ளனர் என பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வந்துள்ளார். கேரளாவிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து கேரளா வந்த பிரதமர் மோடி, எர்ணாகுளத்தில் மதியம் 1 மணியளவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு வந்திருக்கும் அவர், முதல்கட்டமாக திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்று ரூ. 5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்திருக்கிறார்.

பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழா

மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். இவ்விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இரவு 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.