accused
accused pt desk
தமிழ்நாடு

சென்னை: மதுபோதையில் மளிகை கடையை அடித்து நொறுக்கிய கும்பல் - அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை நங்கநல்லூர், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் லிங்கம் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் சக்திவேல் (52). நேற்றிரவு இவரது கடைக்கு முன்பாக சென்னை புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தனசேகர் என்பவர் குடித்து விட்டு சாலையில் விழுந்துள்ளார். இதனைக் கண்ட மளிகை கடைக்காரர் சக்திவேல், மனிதாபிமான அடிப்படையில் அவரை தூக்கி விட்டு உதவி செய்துள்ளார்.

compliant copy

அப்போது மதுபோதையில் இருந்த அதிமுக பிரமுகர் தனசேகர் மளிகை கடைக்காரரிடம் சென்று “எனது செல்போனை கொடு” என மிரட்டி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனசேகர் தனது கட்சிக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்களை வரவழைத்து மளிகை கடைக்காரர் சக்திவேல் மற்றும் அவரது மகன்களை உருட்டுக் கட்டையால் தாக்கி கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். கடைக்குள் நடந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்றுள்ளார் பழவந்தாங்கல் ஆய்வாளர் விமல். தனசேகர் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் ஹரிஷ், ஆய்வாளரையும் தள்ளிவிட்டு தரக்குறைவாக பேசியதோடு, உடன் வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிகளவில் அங்கு குவிந்துள்ளனர்.

இதை கண்ட அனைவரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இது தொடர்பாக மளிகை கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை புறநகர் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உள்ளகரத்தை சேர்ந்த தனசேகர் (48), 185வது வார்டு அதிமுக இளைஞரணி செயலாளர் ரவி (48), சதீஷ் (41), முருகேசன் (50), மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் (43) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

accused

அவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தாக்கியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்போடு குற்றவாளிகளை சிறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அதனை பதிவு செய்தனர். அப்போது வீடியோ எடுக்கக் கூடாது என அதிமுகவினர் செய்தியாளர்களை மிரட்டி செல்போனை பறித்தனர். இச்சம்பவம் ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ஹரிஷ் (24), என்பவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது வழக்கறிஞர் ஹரிஷ் தலைமறைவாக உள்ளார். அவரை பழவந்தாங்கல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செய்தியாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் புனித தோமையார் காவல் நிலைய போலீசார் மற்றொரு வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.