Accused
Accused pt desk
தமிழ்நாடு

சென்னை: மும்பை போலீஸ் எனக் கூறி ஆன்லைன் மூலம் பணம் பறிப்பு; 5 பேர் கைது!

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை கொளத்தூர் திருப்பதி நகரில் வசித்து வரும் வேல்முருகன் என்பவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், “நாங்கள் மும்பை, கிளையிலுள்ள Fedex கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். நீங்கள் மும்பையிலிருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சலில் 1 லேப்டாப், 35,000 ரூபாய் பணம் மற்றும் போதைப் பொருட்கள் உள்ளன. மும்பை போலீஸ் தங்களிடம் விசாரணை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Accused

இதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு நபர், “நான் மும்பை போலீஸ். நீங்கள் போதைப் பொருட்கள் கொண்ட பார்சலை அனுப்பியுள்ளதால், உங்களை கைது செய்ய வருகிறோம்” என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த நபர், “நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் நீங்கள் பணத்தை அனுப்பினால், நாங்கள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி விசாரணை செய்கிறோம்” எனக் கூறியுள்ளார். இதை நம்பிய வேல்முருகன், அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு 49,324 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், யாரோ மர்ம நபர்கள் வேல்முருகனை மிரட்டி, ஆன்லைனில் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார், சைபர் க்ரைம் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், ராஜ்குமார், கணேஷ் ராஜ், எபினேசர், ரத்தினராஜ், ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.