உயிரிழந்த வேலு
உயிரிழந்த வேலு புதியதலைமுறை
தமிழ்நாடு

தீராத வயிற்று வலியால் எடுத்த விபரீத முடிவு.. மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

யுவபுருஷ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு (45). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், வேலு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக மனஉளைச்சலில் இருந்த வேலு, நேற்று மாலை அதே பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீட்கப்பட்ட உடல்

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேலுவின் உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். இதனைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த நபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

அதேபோல் கொடையாஞ்சி பகுதியில் கட்டிட மேஸ்திரி ஆக இருந்த லோகேஷ் என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், வாணியம்பாடி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்தும் ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.