இபிஎஸ், சண்முகம், வேலுமணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

விஜய்க்கு ஆதரவு.. EPS-க்கு எதிராகப் போர்க்கொடி.. இரண்டாக உடையும் அதிமுக?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Prakash J

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று மூன்றாவது கட்சியாக மாறிய நிலையில், கட்சிக்குள் மீண்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்னை, இன்னும் ஒரிரு நாளில் மிகப்பெரும் பூகம்பமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்று 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இந்த தேர்தலில் கிடைக்காமல் போனது. மேலும், மேலும் இதுவரை இல்லாதவகையில், 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது தவெக தலைவர் விஜய், இரண்டு பேருக்கு (திமுக - தவெக) இடையே மட்டுமே போட்டி என்று கூறிய நிலையில், அதுவே தற்போது நிகழ்ந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், அதிமுகவின் எதிர்காலம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்காமல் போனது, அதேபோல திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும்என எதிர்பார்த்தது அதுவும் கைகூடாமல் போனது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 35 எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக குற்றம் சுமத்தி பேசி உள்ளதாக தெரிகிறது. பின்னர் இந்த கூட்டம் நிறைவடைந்தது. இதனால் இருதரப்பிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராக சிலர் பேசியதாக கூறப்படுகிறது. தவிர, அவரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கையெழுத்துப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவிர, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டவிதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. தவிர, அவர்களே உண்மையான கட்சியாக அறிவிக்கப்படும். அதிமுகவில் ஏற்பட்டு உள்ள இந்த பிரச்னை, இன்னும் ஒரிரு நாளில் மிகப்பெரும் பூகம்பமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.