சோகத்தில் கிராம மக்கள்
சோகத்தில் கிராம மக்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை: " 3 கர்ப்பிணி பசுமாடுகள் கொலை" - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

PT WEB

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பின்னியம்மாள். இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்துள்ளது. இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையிலிருந்த பசுமாடுகளை நேற்று வழக்கம்போலத் தனது தோட்டத்துப் பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்று இரவு வழக்கம்போல் பசுமாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மீண்டும் காலையில் எழுந்து சென்று பார்த்தபோது 3 பசுமாடுகளும், ஒரு ஆட்டுக் குட்டியும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சோகத்தில் நிற்கும் கிராம மக்கள்

இச்சம்பவம் குறித்து பின்னியம்மாள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை நடத்தியதில் பசுமாடுகள் அருந்திய நீரில் விஷம் கலந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குடிநீரில் விஷம் கலந்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கர்ப்பிணி பசுமாடுகள், குடிநீரில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.