Accused
Accused pt desk
தமிழ்நாடு

மதுரை: டீக்கடை உரிமையாளர் கடத்தல் - ரூ 40 லட்சம் கேட்டு மிரட்டிய கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது

webteam

செய்தியாளர்: சுபாஷ்

மதுரை மாநகர் கூடல்நகர் அருகேயுள்ள சொக்கலிங்க நகர் முதல் தெரு பகுதியில் வசித்துவருபவர் பழனிச்சாமி (59). இவர், அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதோடு சிலருக்கு பைனான்ஸ் கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பழனிச்சாமி டீக்கடையை திறக்கச் சென்றுள்ளார். அப்போது காரில் காத்திருந்த சிலர் முகவரி விசாரிப்பதுபோல அருகே சென்று கண் இமைக்கும் நேரத்தில் பழனிச்சாமியை கடத்திச் சென்றுள்ளனர்.

Palanisamy

அப்போது பழனிச்சாமி கூச்சலிட்ட நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பழனிச்சாமியின் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரம் கழித்து பழனிச்சாமியின் மகனின் செல்போனில் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் உங்கள் தந்தையை விடுவோம் எனக் கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பழனிச்சாமியின் மகன்கள், கூடல்புதூர் காவல் நிலையத்தில் தங்களது தந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பழனிச்சாமியின் மகன்களிடம் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது காவல்துறையினர் செல்போன் எண் டவரை பாலோ செய்தனர். அப்போது அது மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் பழனிச்சாமியை விட்டுவிட்டு தப்பியோடினர்.

Arrested

இந்நிலையில் தேனி மாவட்டம் மயிலாடும்பாறையைச் சேர்ந்த குணசேகர், சுதாகர், மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்த போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பழனிச்சாமியை அவரது சகோதரரின் மகள் பணம் கொடுத்து கடத்தச் சொன்னதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அளித்த வாக்குமூலம் உண்மையா? என்பது குறித்து அறிய பழனிச்சாமியின் சகோதரரின் மகளிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை காவல்துறையினர் மயிலாடும்பாறை பகுதிக்கு விரைந்துள்ளனர்.