2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், முன்னாள் முதல்வர்கள் மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் அரசியல் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. அதேசமயம், கோவிட் காலக்கட்டம் என்பதாலும் கடும் கட்டுப்படுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெற்றது. எஸ்ஐஆர்-க்கு முன் நடைபெற்ற இந்தத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 6.29 கோடியாக இருந்தது. இதில், 73.63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவைகளிடையே மூன்று முனைப் போட்டி நிலவிய நிலையில், 2 தொடர் தோல்விகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ், இடதுசாரி , மதிமுக, விசிக உள்ளிட்ட 13 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும், மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலுமாக இருந்ததால், திமுகவுக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. விஜயகாந்தின் தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக, எஸ்டிபிஐ கட்சிகள் ஓரணியிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.
நாம் தமிழர், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை ஆனாலும் நாம் தமிழர் கட்சி சுமார் 7%. வாக்குகளை பெற்று மாநிலத்தில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டும் மே 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதேபோல, அதிமுக 66 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தல்களின் 2 தொடர்ச்சியான தோல்விகளுக்கு திமுக முற்றிப்புள்ளி வைத்தது.