#TNElection2026 | மொபைல் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.. தேர்தல் ஆணையத்தின் புதிய ஏற்பாடு!
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கும் அதே சூழலில், அதிமுக வெற்றி பெறும் எனவும் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தான், தேர்தல் முடிவுகள் குறித்தான எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்திருகிறது.
இந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது. பிற்பகலில் யார் வெற்றிக்கு அருகில் இருக்கிறார்கள் என்பது ஏறக்குறைய தெரிந்துவிடும். இந்தசூழலில் தான், தேர்தல் ஆணையம் மொபைல் செயலி மூலம் பொதுமக்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை, தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் மட்டுமே வெளியான நிலையில், 'ECINET' மொபைல் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கப்படவிருக்கிறது. இந்த செயலி மூலம், மாநில வாரியாக மற்றும் தொகுத் வாரியாக முன்னிலை நிலவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படவுள்ளன.

