செய்தியாளர்கள்: சுரேஷ், ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் அடுத்த பிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமரன், தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பிச்சனூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று பள்ளி விடுமுறையின் காரணமாக ஏரி நிரம்பியுள்ளதை பார்க்கச் சென்றுள்ளார் குமரன். செல்லும் வழியில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேர காத்திருந்தது. அதன்படி விளைநிலம் வழியாக குமரன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.
இதனை கவனிக்காத குமரன் மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்ததில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த குருசிலாப்பட்டு போலிசார் மாணவனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் மகனான குமரன் என்ற மற்றொரு சிறுவன் (4ம் வகுப்பு படிக்கிறார்), வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ராமு என்பவர் வீடு கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அங்கு மழைநீர் தேங்கியிருந்தது தெரியாமல் விளையாடிய சிறுவன் பரிதாபமாக அதனுள் விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது. அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.