1980ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல் விநோதமானது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றிருந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றது. சுவாரசியமான இந்த முரணின் பின்னணியை பார்க்கலாம்.
1980ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜனவரி மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜனதா, இடதுசாரிகளுடன்அதிமுக கூட்டணி வைத்தநிலையில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்தித்தது திமுக. ’நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ எனக் கூறி பரப்புரைசெய்தார் மு.கருணாநிதி. நெருக்கடி நிலையை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பலையால் 1977இல் ஆட்சியை இழந்திருந்த இந்திரா இம்முறை அமோக வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார்.
தமிழ்நாட்டில் திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. சிவகாசி, கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் அதிமுக வென்றது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி எம்ஜிஆர் அரசை டிஸ்மிஸ் செய்தார் இந்திரா காந்தி. இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களம் கண்டது அதிமுக. திமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. இதில் காங்கிரஸ் 114, திமுக 112 என ஏறத்தாழ சரிசமமாக தொகுதிகளைப் பங்கிட்டுக்கொண்டன. தேர்தல் முடிவுகள் எதிர்பாராத வகையில் அமைந்தன. ஜனவரியில் நடந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி இம்முறை 69 இடங்களில் மட்டுமே வென்றது. அதிமுக 129 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. எம்ஜிஆர் மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் மு.கருணாநிதி சென்னை அண்ணா நகர் தொகுதியில் வென்றார். மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முக்கிய முடிவுகள், ஆட்சிக் கலைப்பு அனுதாபம் உள்ளிட்டவை எம்ஜிஆர் ஆட்சிக்கு வர உதவின. அரசியல் காற்று குறுகிய காலத்திலேயே திசை மாறும் என உணர்த்தும் வகையில் அமைந்தது இத்தேர்தல்.