கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய இந்த விபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் தற்போது விஜயின் தவெக ஆட்சிக்கு வந்து, விஜய் முதல்வராகியுள்ள நிலையில், கரூர் விவகாரத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய் முதல்வரானது முதல் தமிழ்நாட்டின் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
அந்த வகையில் தற்போது கரூர் மாவட்ட காவல்துறை கூண்டோடு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், தனிப்பிரிவு காவலர்கள் ராஜாமணி, ராமலிங்கம், மோகன்ராஜ், கதிர்வேல் உள்ளிட்ட 19 காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தவர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.