செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமேஸ்வரம் மீன் பிடித்துத் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று படகையும் அதிலிருந்த 34 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் வழக்கு இன்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜமீல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று படகுகளில் ஒரு படகின் எண் தவறாக உள்ளதால் அந்த படகில் உள்ள 15 மீனவர்களுக்கான வழக்கு விசாரணை வரும் 10ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இரண்டு படகுகளில் உள்ள 19 மீனவர்களுக்கான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது ஒரு படகில் ஓட்டுநர் மற்றும் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இருவருக்கும் தலா ரூ.60.50 லட்சம் (இலஙலகை பணம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், மற்றொரு படகின் ஓட்டுனருக்கு ரூ.60.50 லட்சம் அபராதம. கட்ட தவறும் பட்சத்தில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், எஞ்சிய 16 மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்பளித்தார். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதால் படகு அரசுடைமையாக்கப்படுவதாகவும் எஞ்சிய மற்றொரு படகின் வழக்கு விசாரணை பின்னர் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தவிட்டார்.