தருமபுரி
தருமபுரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தருமபுரி - சிறுவனுக்கு பாலியல் தொல்லை... கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம்!

PT WEB

செய்தியாளர் - விவேகானந்தன்

தருமபுரி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவனை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரில் அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தததில் அந்த 10 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் (17 வயது பள்ளி மாணவர்) அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 17 வயது சிறுவனான பள்ளி மாணவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில், 10 வயது சிறுவனுக்கு அந்த 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை தந்ததும், அதை அந்த 10 வயது சிறுவன் வெளியே சொல்லி விடுவான் எனக் கருதி கிணற்றில் தள்ளி 17 வயது சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து 10 வயது சிறுவன் உடலை மீட்ட காவல்துறையினர் கொலை தொடர்பாக 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கைதான சிறுவனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் கஞ்சா எளிதில் கிடைப்பதால் சிறுவர்களின் வாழ்க்கை பாழாகி வருவதாகவும், எனவே கஞ்சா விற்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.