Bcci PTI
விளையாட்டு

அகர்கர் பதவி நீட்டிக்கப்படுமா? என்ன முடிவெடுக்கப் போகிறது பிசிசிஐ!

தேர்வுக்குழுவின் கருத்துக்கு மாறாக, ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியில் முக்கியமான வீரராக நீடிப்பார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பகிரங்கமாக அறிவித்தார்.

Prakash J

இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைகிறது. அவருடைய ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்த ஆலோசனைகளை பிசிசிஐ தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருப்பவர், அஜித் அகர்கர். ஜூலை 2023-இல் பொறுப்பேற்ற அகர்கரின் தலைமையிலான தேர்வுக் குழுவின் காலத்தில், இந்திய அணி 2024 மற்றும் 2026 டி20 உலகக்கோப்பைகளையும், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இது தவிர வேறு சில தொடர்களையும் வென்றுள்ளது. இந்தச் சூழலில், அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க பிசிசிஐ ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், தற்போது தேர்வுக் குழுத் தலைவரை மாற்றுவது அணியின் எதிர்கால திட்டமிடலைப் பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அதிகாரிகள் அகர்கருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக, அகர்கரின் பதவி நீட்டிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2027 உலகக் கோப்பை திட்டத்தில் மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து தொடரின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ரோஹித் சர்மா இல்லை என்று தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் கடும் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா பிசிசிஐ உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், தேர்வுக்குழுவின் கருத்துக்கு மாறாக, ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியில் முக்கியமான வீரராக நீடிப்பார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பகிரங்கமாக அறிவித்தார். இதனால், பிசிசிஐ-க்கும், தேர்வுக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதால், பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்து அகர்கர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். இந்த நிலையில்தான், அவரிடம் பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது.