கங்குலி எக்ஸ் தளம்
T20

”பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவே வேண்டாம்” - சவுரவ் கங்குலி

”பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கெடுபிடிகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு அந்த நாடும் விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு எல்லை தரப்பிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. இனி எப்போதும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ள்ளன. இதைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் இருநாட்டுத் தொடர் நடைபெறாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ”பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி

இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய கங்குலி, "100 சதவீதம், பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விஷயங்கள் ஒவ்வோர் ஆண்டும் நடப்பது நகைச்சுவை அல்ல. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் ஒரே இடமாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களாக மட்டுமே இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.