சர்வதேச கிரிக்கெட்டில் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக சம்பவம் செய்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் 5 கோப்பைகளை வென்று வெற்றிக்கேப்டனாக வலம்வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு கோப்பை வெல்வது என்பதே பல சாம்பியன் வீரர்களுக்கு கனவாக இருந்துவரும் சூழலில், சிஎஸ்கே அணியை கேப்டனாக வழிநடத்திய தோனி 5 கோப்பைகளை வென்றதோடு, 10 முறை இறுதிப்போட்டிக்கும் அணியை வழிநடத்தியுள்ளார்.
இப்படி ஒரு தலைசிறந்த கேப்டனை கொண்டிருந்த சிஎஸ்கே அணி, தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறிவருகிறது.
2023 ஐபிஎல் கோப்பை வென்றபோதே தோனி ஓய்வை பெற்றுவிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தபோது, ரசிகர்களுக்காக அடுத்தடுத்து 2 சீசன்களில் பங்கேற்கும் முடிவை எடுத்து விளையாடிவருகிறார். இப்படியான நேரத்தில் 2025 ஐபிஎல் தொடரில் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப்க்கு முன்னேற முடியாமல் சிஎஸ்கே வெளியேறியது. 2025 ஐபிஎல் தொடரிலும் 3 போட்டிகளில் வரிசையாக தோற்று வெற்றியை பெற முடியாமல் தடுமாறிவருகிறது.
இந்த சூழலில் தோனி பாதியிலேயே ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓய்வு குறித்து சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்து பேசியிருக்கும் தோனி, “நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன், எனக்கு தற்போது 43 வயது, இந்த ஐபிஎல் சீசன் முடியும்போது, ஜூலையில் எனக்கு 44 வயதாக இருக்கும். என்னால் கூடுதலாக ஒரு வருடம் விளையாட முடியுமா என்று முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன, அதை என்னால்கூட முடிவு செய்ய முடியாது. நான் விளையாடலாமா வேண்டாமா என்பதை என் உடல்தான் முடிவுசெய்யும்" என்று ராஜ் ஷாமானி பாட்காஸ்டில் பேசியுள்ளார்.