சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டிவெய்ன் பிராவோ, 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த பிராவோ, நான் தோனியிடம் விவாதித்த பிறகே முடிவை உறுதிசெய்தேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடுகிறது.
போட்டிக்கு முன்னதாக சந்தித்து பேசிய பதிரானா மற்றும் பிராவோ இருவரும் ஜாலியாக அன்பை வெளிப்படுத்தினர்.
சிஎஸ்கே தங்களுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், பதிரானா மற்றும் பிராவோ இருவரும் சில வார்த்தைகளை ஜாலியாக பகிர்ந்து கொண்டனர்.
அந்த வீடியோவில், பதிரானா பார்ப்பதற்கு முன்பே அவரின் காலில் விழுந்து தொட்டு வணங்கினார் பிராவோ. லேட்டாக பார்த்த பதிரானா அவரை உடனடியாக எழுப்பி, பிராவோவின் காலை தொட்டு பதிரானா வணங்கினார்.
பிரோவோ பேபி கோட் (GOAT) என பதிரானாவை புகழ, நான் போட்டியில் என்ன செய்யணும் சொல்லுங்க, சிஎஸ்கேவுக்கு விஸ்வாசமா இருங்க என முன்னாள் பயிற்சியாளரிடம் பதிரானா கேட்க, நீங்கள் விளையாடாமல் இருப்பதுதான் எங்களுக்கு சரியானது என ஜாலியாக கலாய்த்தார் பிராவோ. இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து விலகிய நிலையில், சென்னை அணியை தோனி கேப்டனாக வழிநடத்த உள்ளார்.